என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறையுண்டு நீ சொல், மனமே
1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
என்னோடிருக்கவே எழுத்திருந்தோர்;:
விண்ணுலகுயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர்,
மித்திரனே சுகபத்திர மருளும்.
....
போதகர் சாமுவேல் தரங்கம்பாடி, மற்றும் பெங்களுர் இறையியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தன் வாழ்க்கையில் சோதனைகள் பலவற்றை அனுபவித்தார். தொடர்ந்து வந்த துன்பங்களால் வேதனையுற்று, சோர்வு மேலிட, ஒருநாள் மாலை மயங்கும் வேளையில், சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் பாதையில் கிடந்த ஒரு சிறு காகிதத் துண்டைப் பார்த்துக் கையிலெடுத்தார். அதில் "என் மீட்பர் உயிரோடிருக்கிறார்," என்ற வேத வசனம் எழுதப்பட்டிருந்தது.
வேத அறிஞராகிய சாமுவேலின் மனக்கண்முன், யோபுவின் வாழ்க்கை திரைப்படம் போல ஓடியது. யோபு கடந்து வந்த பாடுகளைத் தான் அனுபவிக்கும் வேதனைகளோடு, ஒப்பிட்டுப் பார்த்தார். அத்தனைபாடுகள் மத்தியிலும், மனந்தளராது, இவ்வசனத்தின் மூலம் சாட்சி பகிர்ந்த விசுவாச வீரன் யோபுவின் சவால், சாமுவேலுக்குப் புத்துணர்ச்சியையும், தெம்பையும் அளித்தது.
தனது வேதனைப் புலம்பல்களினின்று விடுபெற்ற போதகரின் உள்ளம், புதிய உற்சாகத்தால் நிறைந்தது. இவ்வசனம் அவர் உள்ளத்தில் தந்த நம்பிக்கையே, இப்பாடலாக உருவெடுத்தது. தன் வாழ்க்கையின் சோர்வுகளை இப்பாடலைக் கொண்டு மேற்கொண்டு வெற்றி பெற்றார்.
கருத்து மிகுந்த இப்பாடல், இன்னும் சோர்ந்து போகும் மக்களுக்கு, நம்பிக்கையூட்டும் பாடலாக விளங்குகிறது.
சாமுவேல் ஐயர் எழுதிய "குணப்படு பாவி" என்ற மற்றொரு கீர்த்தனை, திருச்சபை வழிபாட்டில், பாவ அறிக்கைக்கு வழிநடத்தும் பாடலாக உபயோகிக்கப்படுகிறது.