கேள்வி-பதில் பகுதி
கேள்வி
அன்புள்ள அங்கிள்,
கல்யாணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. 2 குழந்தைகள். இரண்டு பேரும் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறோம். ஆனால் என் மனைவி பேங்க் அக்கொண்டில் எவ்வளவு வைத்திருக்கின்றார் என்று எனக்கு தெரியாது. அது போல என் அக்கொண்டில் எவ்வளவு இருக்கின்றது என்று மனைவிக்கு தெரியாது. இதனால் தினம் தினம் சண்டைதான். இதை சரி செய்ய ஏதாவது வழி சொல்லுங்களேன்.
உங்கள் பதிலுக்கு காத்திருக்கும், மனோஜ், மும்பை
புதில்
அருமை நண்பர் மனோஜுக்கு எங்களது வாழ்த்துக்கள். பாம்பே பட்டணத்தில் வேலை செய்கிற இன்ஞினியராக தாங்கள் வசதியோடு இருக்கின்றீர்கள் என்பதை ஒரு பக்கத்தில் மனமகிழ்ச்சி அடைகிறேன் என்றாலும், மறு பக்கத்தில் தாங்கள் திருமணத்திற்கு முன்பாக தெரிந்திருக்கின்ற எளிய உண்மைகளை யாரும் உங்களுக்கு சொல்லவில்லையே என்று மனம் வருந்துகிறேன். திருமணம் ஆன துவக்கத்திலேயே தங்கள் வாழ்க்கை நம்பிக்கையோடும், ஒருவர் மேல் ஒருவர் சார்ந்திருப்பதற்கும், மறைவுகள் எதுவும் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். தாங்கள் வேலை செய்து வருகிற கம்பெனியில், தாங்கள் பெற்று வருகின்ற வருமானத்தை உங்கள் மனைவியிடம் மகிழ்ச்சியோடு சொல்லியிருக்கலாமே?. அப்படி சொல்லியிருந்தால், தங்கள் மனைவியும் வேலைக்கு செல்பவராக இருப்பதால், அவர்களும் அவர்களது சம்பளத்தை உங்களுக்கு சொல்லியிருப்பார்களே?
அத்துடன் தங்களுக்கு எத்தனை பேங்க் அக்கௌண்ட் இருந்தாலும் , கணவனுக்கும் மனைவிக்கும் சேர்த்து குடும்ப அக்கௌண்ட் ஒன்று கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று குடும்ப ஆலோசனை அளிக்கிற நாங்கள் உறுதியாக சொல்கிறோம்.
எளிய காரியங்களில் கூட, நாம் மறைத்து செய்வோமென்றால் அது பின்னால் அதிக கேடு உண்டாக்குகிறதை நாங்கள் கண்டு வருகிறோம். இன்னும் காலம் கடந்து விடவில்லை. உடனடியாக தாங்கள் தங்கள் மனைவியோடு உட்கார்ந்து உங்களுடைய பே சிலிப்பை காண்பியுங்கள். ஜெபிக்கிற பழக்கம் இருக்குமென்றால் இந்த மாதம் உங்கள் சம்பளம் வந்தவுடன், மாத துவக்கத்தில் தாங்கள் உட்கார்ந்து பிள்ளைகளோடும் உங்கள் வருமானத்தை வைத்து கண்டிப்பாக ஜெபிக்க வேண்டும். இப்படி செய்தால் உங்கள் மனைவியும் இதை ஆரம்பிப்பார்கள்.
நீங்கள் வேத புத்தகத்தை நம்புவீர்கள் என்றால், பத்தில் ஒரு பகுதி தேவனுக்கு கொடுக்க வேண்டும். அதையும் தாங்கள் கொடுக்க ஆரம்பியுங்கள். தங்களுக்கு கடன்கள் ஏதும் இருக்குமென்றால், அதற்கும் நீங்கள் செலுத்த வேண்டும்.இது முதலில் கடினமாக இருந்தாலும், இப்படி செய்தால் தான் ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை பிறக்கும். நம்பிக்கை குடும்பத்தில் இல்லாமல் இருந்தால் அது குடும்பம் அல்ல.
வேத புத்தகத்தில் ஆதியாகம் இரண்டாம் அதிகாரத்தில், "ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்" என்று பார்க்கின்றோம். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடையே எந்த ஒளிவும் மறைவும் இல்லாமல் இருந்தது. தாங்கள் இவ்வளவு நாளும், ஒளித்து மறைத்து வாழ்ந்திருக்கின்றீர்கள். இதை உடனடியாக சரி செய்தால் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியான குடும்பமாக மாறும்.
மனைவியினடத்தில் எதையும் மறைக்க கூடாது. திருமணத்தில் முன் நடந்த நிகழ்ச்சிகளை, வேண்டாதவகளை சொல்ல தேவையில்லை, ஆனால், சொல்ல வேண்டிய வருமானம், உங்கள் கடன்கள் இன்னும் சொல்லக்கூடிய காரியங்களை சொல்லியிருக்க வேண்டும். இன்னும் காலம் கடந்து விடவில்லை. உடனடியாக அதை சரி செய்யுங்கள்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
தங்கள் அங்கிள்
ராஜாசிங்
( மேலே உள்ள கேள்வி பதில் பகுதியில், பெயரும் ஊரும் மாற்றப் பட்டுள்ளன)