அதிக நன்மை வரும்
சகோ. சாம்சன் பால்
Be Strong

தேவ பக்தர் ஒருவருடைய வீடு புயல் காற்றினால் நொறுங்கிப் போனது. எல்லோரும் அவருக்காகப் பரிதாபப்பட்டனர். ஆனால் அவரோ கர்த்தர் எனக்குப் புதிய ஒரு வீட்டைத் தருவதற்காகப், பழையதை விழுந்து போக அனுமதித்தார் என்று உற்சாகத்தோடு கூறினார். சில நேரங்களில் கர்த்தர் புதிதாகச் சில நன்மைகள் நமக்குத் தருவதற்காக, வேறு சில நன்மைகள் நம்மை விட்டு விலகிப் போவதை அனுமதிப்பார். நம்முடைய சில திட்டங்கள் சில காரணங்களால் உடைந்துபோக நேரிடலாம். அங்கே கர்த்தர் ஏன் அவ்விதம் அனுமதித்தார் என்ற கேள்வி எழும்பும். ஆனால் தேவ திட்டத்தின்படி நமக்கு அதிக நன்மையான காரியங்கள் அமைவதற்காக, கர்த்தர் அவ்விதம் அனுமதிக்க் கூடும்.
 
யோசேப்பு, தாவீது ஆகியோரின் இளமைக்காலத் திட்டங்களும், விருப்பங்களும் உடைக்கப்பட்டன என்று சொல்லலாம். அவைகள் அவர்களுக்கு மிகுந்த மன சஞ்சலங்களைக் கொடுத்தன என்பதும் உண்மை. ஆயினும் அவைகளையும் தேவன் நன்மைக்கேதுவாகவே அனுமதித்தார். தேவ திட்டத்தின்படியான புதிய ஆசீர்வாதங்களும், புதிய உயர்வுகளும் வருவதற்கேதுவாகவே அவர்களின் திட்டங்கள் உடைக்கப்படுவது தேவனுடைய பார்வையில் அவசியமாக இருந்தது.
 
யோசேப்பின் மேல் சகோதரர்களின் பொறாமை புயலாகத் தாக்கியது. தாவீதை சவுல் ராஜாவின் எரிச்சல் புயலாகத் தாக்கியது. அந்நேரங்களில் அவர்கள் எதையோ இழந்து விட்டதாகவே எண்ணியிருப்பார்கள். ஆனால் அவைகளின் வாயிலாகத்தான் தேவன் அவர்களைத் தம்முடைய திட்டத்தின்படி மேன்மையாக ஆசீர்வதித்தார். ஆம். உங்கள் கனவுகள் கலைந்ததற்காகவோ, உங்கள் எதிர்பார்ப்புகள் தோல்வியடைந்ததற்காகவோ கவலைப்படாதிருங்கள். கர்த்தரால் மேன்மையானவை வரும். காத்திருங்கள்.

 


சகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.