நல்ல தோற்றம் ஒன்றும் இல்லாதவர்கள் என்று எண்ணப்பட்டாலும் ........2 கொரி 6:10
வாலிபர் கருத்தரங்கு ஒன்றிற்கு விசேஷ சொற்பொழிவாளர்களாக இரண்டு இளவயது சுவிசேஷர்கள் அழைக்கப்பட்டிருந்த்னர். அவர்களில் ஒருவர் சினிமா நடிகர் போல நல்ல ஒப்பனையுட்ன்,கோட் சூட் ஸ்டைலில் கச்சிதமாக வந்திருந்தார். பெயருக்கு முன்னால் டாக்டர் பட்டமும் இருந்தது. அரங்கத்தில் இருந்த எல்லார் கண்களும் அவரை மிகுந்த எதிர்பார்புடன் நோக்கியது ஆனால் அவருடைய சொற்பொழிவில் எந்தச் சுவையும் சாரமும் இருக்கவில்லை. அவருக்கு அடுத்ததாகப் பேச வந்தவர் மிக மிக சாதாரணமாகத் தோன்றினார். அவரிடத்தில் யாரும் சிறப்பாக எதையும் எதிர்பார்க்கவில்லை. இவர் என்ன பேசிவிடப்போகிறார் என்ற எண்ணமே எல்லாரிடமும் இருந்தது. ஆனால் அவருடைய அனல் மிகுந்த வார்த்தைகளும், அர்த்தம் மிகுந்த கருத்துகளும் கூடியிருந்த யாவரையும் அனலூட்டி எழுப்பியது.
பிறருடைய பார்வையில் மிக நன்றாகத் தோன்றி, தங்களை மற்றவர்கள் மிக உயர்வாக எண்ண வேண்டும் என்ற ஆசை பலருடைய உள்ளத்தில் உண்டு. ஆனால் தோற்றத்தால் அல்ல, உண்மையான செயலாக்கத்தாலும், ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளைப் பிறருக்கு அளிப்பதினாலும் பிறருடைய கவனத்தைக் கவர வேண்டும். என்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைவிட, என்னிடம் பிறர் எதைப் பார்க்கின்றார்கள், என்னிடம் பிறர் எதனைப் பெறுகின்றார்கள் என்பது முக்கியமானது.
யோசேப்பு எகிப்தில் ஒரு அடிமையாகத்தான் இருந்தான். ஆனால் அவனிடம் போர்த்திபார் உண்மையையும், நேர்மையையும், நல்ல திறமைகளையும் பார்த்தான். எனவே அவன் உயர்த்தப்பட்டான். சிலர் எனக்கு நல்ல நிறம் இல்லையே, நல்ல தோற்றம் இல்லையே என்று வருந்துவார்கள். ஆனால் நம்மிடம் நல்ல பண்புகளும், நல்ல ஆற்றல்களும் இருந்தால் அவைகள்தான் மேன்மையானவைகள்.