தகப்பனிடம் சொத்துரிமைப் பெற்றவள்
திருமதி ஜேசுபாதம்
Words and Word of God

கீரியாத் செப்பேரை சங்காரம் பண்ணி பிடிக்கிறவனுக்கு காலேப் தன் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணி கொடுப்பதாகச் சொன்னான். அவன் தம்பி கேனாசின் குமாரன் ஒத்தனியேல் அதைப் பிடித்து காலேபின் மகள் அக்சாளை மணந்தான்.
 
அவள் புறப்படுகையில் தன் தகப்பனிடத்தில் ஒரு வயல் வெளியைக் கேட்க வேண்டும் என்று உத்தரவு பெற்றுக் கொண்டு கழுதையின் மேலிருந்து இறங்கினாள். என்ன வேண்டும் என்று தகப்பன் கேட்டதற்கு,  அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்


கேளுங்கள் தரப்படும் என்ற ஆண்டவரின் வார்த்தையின் பொருளை உணர்ந்தவள். தகப்பனுக்குத் தெரியும் என்ன கொடுக்க வேண்டும் தன் மகளுக்கு என்று. ஆனாலும் மேலும் சிலவற்றைக் கேட்ட போது மறுக்காமல் கொடுத்தான். நம் பரம தகப்பனும் நமக்கு உலக ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறார். மேலும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கேட்கும் போது உலக ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்வோம்.
 
இன்று அநேகத் தாய்மார்கள் பட்சபாதத்துடன் நடந்துக் கொள்கின்றனர். தாங்கள் அதிகமாய் நேசிக்கும் பிள்ளைகளுக்கு அவர்கள் தங்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் இருந்தாலும் கூட அவர்களுக்குத்தான் அதிக சொத்துக்களைக் கொடுக்கின்றனர். தாய்மார்களாலேயே அநேகக் குடும்பங்களில் சொத்துத் தகராறு உண்டாகிறது. எல்லாருக்கும் சரிசமமாய் பங்கு கொடுக்க வேண்டும். சிலர் தங்களுக்குப் பிடித்த மருமகளாய் இருந்தால் அந்த மகனுக்கு அதிகமாகவும், பிடிக்காத மருமகளாய் இருந்தால் அந்த மகனுக்கு குறைவாகவும் கொடுக்கின்றனர். தேவன் பட்சபாதமுள்ளவர் (கலா. 2:6) அல்லவே! பின் நாம் ஏன் பட்சபாதம் காட்ட வேண்டும்!
        
மகனுக்கு சொத்தில் பங்கு கொடுத்து விட்டு மகளுக்கு ஒன்றும் கொடுக்காதவர்களும் மகளுக்குக் கொடுத்து மகனுக்குக் கொடுக்காதவர்களும் உண்டு. எல்லாவற்றையும் பிள்ளைகளுக்குப் பிரித்து கொடுத்துவிட்டு முதிர்வயதில் தங்களிடமும் ஒன்றுமில்லாமல் எல்லாராலும் இகழப்படுவரும் உண்டு, கடைசி வரை தன்னிடம் வைத்துக் கொண்டு ஒரு பிள்ளைகளுக்கும் ஒன்றும் கொடுக்காமல் இருப்பவரும் உண்டு, தங்கள் பிள்ளைகளுக்கு ஒன்றும் கொடுக்காமல் பிறருக்கு கொடுப்போரும் உண்டு. கர்த்தருடைய ஞானத்தைப் பெற்றவர்கள் கர்த்தரின் சித்தப்படி அருமையாகப் பகிர்ந்து கொடுப்பர். அவர்களுக்குப் பின் அனைவரும் அவர்களைப் போற்றுவார்கள்.
 
அநேக குடும்பங்களில் இன்று நிலத்தகராறும் சொத்துத் தகராறும்தான். காரணம் தெய்வ பயமோ, தெய்வீக அன்போ அவர்களிடம் இல்லை. கேட்டுப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.  கேளாமல் மனதில் வைத்துக் கொண்டு புகைந்துக் கொண்டிருப்பது தான் தவறு. அநேகர் வயதாகியும் உயில் எழுதுவதில்லை. அதனால் அவர்களுக்குப் பின் பிள்ளைகள் சொத்து தகராறில் அடிதடியில் இறங்கி விடுகின்றனர். சகோதர பாசம் காணாமல் போய் விடுகின்றது. பெற்றோரின் ஞானமில்லா இச்செயலால் சகோதர அன்பை இழந்து பிரிந்து போய் விடும் குடும்பங்கள் ஏராளம்.
 
சொத்திற்காக எல்லைக்குறியை மாற்றி (நீதி 23:10) வைத்து சாபத்தைப் பெற்றுக் கொள்ளும் குடும்பங்கள் பெருகிக் கொண்டு வருகின்றது. கர்த்தருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது மற்றெல்லாவற்றிலும் (உலகப் பிரகாரமான காரியங்களில்) கவனம் செல்லாது. சில பெண்கள் தங்கள் தாய் வீட்டிலிருந்து கணவன் வீட்டிற்குப் பொருட்களைக் கொண்டு செல்வதிலேயே குறியாக இருக்கின்றார்கள்.  கணவன் ஒருவேளை பெற்றோரிடமிருந்து கொண்டு வரச் சொன்னால், கர்த்தரின் சமூகத்தில் அந்த காரியத்தை வைத்து ஜெபிக்கும்போது கர்த்தர் சூழ்நிலையை மாற்றித் தருவார். அதைவிட்டு கர்த்தரிடம் கூறாமல் சுயமாய் முடிவெடுக்கும்போது புகுந்த வீட்டிற்கும், பிறந்த வீட்டிற்கும் கசப்புண்டாகிறது. சமாதானத்தைத்தான் உண்டாக்க வேண்டுமே தவிர பிரிவினையை அல்ல. பிரிப்பதும், கசப்புண்டாக்குவதும் பிசாசின் செயல். பிசாசின் ஆதிக்கம் வளர இடம் கொடுக்கக்கூடாது.
 
சிறந்தவை எல்லாம் தனக்கு வேண்டும் என விரும்புவது தவறு. விட்டுக் கொடுக்கும்போது கர்த்தரின் ஆசீர்வாதத்துடன் நமக்கு தேவையானவைகளும் கிடைக்கும்.. ஆபிரகாம் லோத்துவிற்கு விட்டுக் கொடுத்ததால் கர்த்தரின் ஆசீர்வாதத்துடன் கூடிய ஐஸ்வரியம் கிடைத்தது. லோத்து செழிப்பானவற்றைத் தான்தான் பெற்றுக் கொள்ள வேண்டும்,  என்று நிலத்தைத் தெரிந்து கொண்டதினால் அவன் சந்ததியே அழிவைத் தேடிக் கொண்டது. பணம் பாதாளம் வரைதான். ஆனால் தேவ அன்போ எல்லை இல்லாதது.
 
“வீட்டோட வீட்டைச் சேர்த்து வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ.” (ஏசாயா 5:8)


சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.