நான் ஒர் M.B.B.S. மருத்துவர்.. D.Ch.ம் முடித்துள்ளேன். என் பெற்றோர் எனக்கு திருமண ஓழுங்கு செய்த போது “பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று பல ஆண்டுகள் தள்ளிவிட்டேன்... திருமணம் செய்துகொள்ள தயாரானபோது எனக்கு வயது 32 தாண்டிவிட்டது. 32 வயதிற்கு மேல் எங்கள் உறவின் முறையில் மருத்துவர் யாரும் கிடைக்கவில்லை.
எனக்குக் கிடைத்த கணவர் டாக்டர் கோபால். பிரசித்தி பெற்ற டெல்லி கல்லூரி ஒன்றின் Senior Lecturer. வயது 35. அப்பப்பா..எப்படியோ எங்கள் ஆலயத்தில் வைத்து திருமணத்தை முடித்தோம். இரண்டே மாதத்தில் என் கனவுக்கோட்டை உடைய ஆரம்பித்தது.
என் கணவர் தெய்வத்தை நம்பாதவர்.. ஓரிரு மாதங்கள் என் கட்டாயத்தின் பேரில் என்னுடன் ஆலயத்திற்கு வந்தார்.. பின் அநேக குற்றச்சாட்டுகள் சொல்லி ஆலயத்திற்கு என்னுடன் வருவதை நிறுத்திவிட்டார்.
மாறாக.. எங்கள் வீட்டில் “பேய்” பிசாசுகள் இருக்கிறது என்று மந்திரக்காரர்கள், பூஜைகள் எனக்குக தெரியாமலே செய்ய ஆரம்பித்தார். அவரது மாத வருமானமோ ரூ. 20,000.க்கும் குறைவே, என் வருமானம் சுமார் ரூ. 40,000 க்கும் அதிகம். ஒரே ஆண்டில் எங்களுக்கு ஒர் அழகிய பெண் குழந்தை... ஏஞ்சல் என்று பெயரிட்டோம்.
சில மாதங்களில் என் குடும்பம் சிதைய ஆரம்பித்தது.. ஒன்றுமில்லாத காரணங்களை எல்லாம் சொல்லி, தினமும் எங்கள் வீட்டில் புயல் அடிக்க ஆரம்பித்தது.. என்னால் தாங்கவே முடியவில்லை.. பதினெட்டே மாதங்களில் நாங்கள் பிரிந்தே விட்டோம். பலர் முயற்சி எடுத்தனர்..யாரையும் என் கணவர் பேச ஒட்டவே இல்லை.. தனித்தனியாக வாழ ஆரம்பித்தோம்.
என் மகளும் என் மருத்துவப்பணியுமே எனக்கு ஆறுதல் அளித்தது. டெல்லியில் ஒரு பிரசித்தி பெற்ற பள்ளியில் எல்.கே.ஜி- யில் சேர்த்தேன்.. மற்றபிள்ளைகளின் அப்பா பள்ளிக்கு வரும்போதெல்லாம் “என் அப்பாவைக் காணோமே” என்பாளாம், என்னிடம் ஒர் நாள் மழலை மொழியில் கேட்டே விட்டாள் “அம்மா, நம்ம அப்பா காணாமல் போய்விட்டாரா?..
என் கன்னங்களில் கண்ணீர் வடிந்தது, “அப்ப, ஜெபம் பண்ணலாமா? என்று சொல்லி.. படுக்கையை விட்டு எழுந்தாள் .. படுக்கையிலேயே முழங்கால் இட்டாள் ..நானும் அவளோடு அவளுக்காக முழங்கால் போட்டேன்.
Jesus, எனக்கு அப்பா வேண்டும்.. கூட்டிக்கிட்டு வாங்க.. ஆமென்”..ஜெபித்த உடனே தூங்கிவிட்டாள்.. அன்று இரவு ஆரம்பித்த ஏஞ்சலின் ஜெபம் 9 ஆண்டுகள் தொடர்ந்தது, ஜெபித்துக் கொண்டே இருந்தாள்.. அடிக்கடி ஜெபிப்பாள்.. எனக்கும் ஆறுதல் சொல்வாள்.
4 ஆண்டுகளுக்கு முன்.. அடுத்த தெருவில் என் கணவர் கோபால் வீடு எடுத்து குடி வந்ததைக் கண்டோம். எனக்கு ஒரே ஆச்சரியம். ஒர் நாள் மாலை நானே ஏஞ்சலுக்கு அவரைக் காட்டிக்கொடுத்தேன்.. அன்றிலிருந்து ஏஞ்சல் அவர் வீட்டுக்கு அடிக்கடி போவாள். விளையாடுவாள்.. வீட்டில் வந்து கண்ணீரோடு ஜெபிப்பாள். என் பெயரைக் கேட்டாலே கோபப்படுவாராம்.
இன்று.. 13 ஆண்டுகளுக்குப் பின் என் கணவர் என்னோடிருக்கிறார். இப்போது நான் அடுத்த குழந்தைக்காக எதிர்நோக்கியுள்ளேன். என் பிள்ளை ஏஞ்சலின் ஜெபத்தைக் கேட்ட தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.
யாக்கோபு 4: 10. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.