தாழ்மையின் தன்மையைத் தரித்தவள்
திருமதி ஜேசுபாதம்
Reaching out people
மரியாள் (லூக் 1:38)
 
பெத்லகேமில் ஒரு எளிய குடும்பத்தில் இருந்த மரியாளிடம் தேவதூதன் வந்து பரிசுத்த ஆவியால் கர்ப்பந்தரித்து ஒரு குழந்தையைப் பெறுவாய் என்று சொன்னபோது “இதோ நான் ஆண்டவருக்கு அடிமை என்று தன்னை அர்ப்பணித்தாள். அந்த வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்தாள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவள் வயிற்றில் பிறக்கும்படி தேவன் முன்குறித்திருந்தார். காரணம் அவளின் தாழ்மையே! ஆண்டவருக்கு அடிமை (லூக் 1:38) என்றாள்.
 
இன்று தாழ்மை என்றால் என்ன? என்ன விலை எனக் கேட்கும் அளவில் இருக்கிறது நிலமை. வீட்டில், உறவில், ஆலயத்தில் எங்கும் இல்லை தாழ்மை. ஏன் ஊழியங்களிலும் இல்லை. நான்தான் பெரியவன், நான்தான் சிறந்தவள் என்ற எண்ணம் அநேகமான பெண்கள் மத்தியில் உள்ளது, கர்த்தரின் சுபாவங்களில் பிரதானமானது இந்த தாழ்மைதான். (மத் 11:29) அண்ட சராசரங்களைப் படைத்தவர், மனுஷரைப் படைத்தவர், தேவ தூதர்களால் புகழ்ந்து போற்றப்படுகிறவர், மனு உருக்கொண்டு ஏழையின் கோலமாய் தாழ்மையைத் தரித்தவராய் வந்தார். எல்லாவற்றிற்கும், எல்லாருக்கும் மேலாக இருந்தாலும் சீஷர்களின் கால்களைக் கழுவினார் (யோ 13:5) பூமிக்கு இறங்கினதும் தாழ்மையைக் குறிக்கிறது அல்லவா!
 
இன்று அநேகர் கணவனிடம் தாழ்ந்து போவதில்லை, அவர்களுக்கு அவ்வளவு திமிர் இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும் என வீம்பு பேசுகின்றனர். தாழ்மை இருந்தால்தான் விட்டுக் கொடுக்கும் மனம் வரும். விட்டுக் கொடுக்கும் தன்மை வந்தால்தான் சமாதானம் உண்டாகும். சமாதானம் வரும்போது சந்தோஷம் கிடைக்கும். இவை எல்லாவற்றிற்கும் மூல காரணம் தாழ்மையே! தாழ்மையுள்ளவர்களுக்குத்தான் தேவன் கிருபையளிக்கிறார். (யாக் 4:6) தன்னைத்தான் தாழ்த்தும்போது உயர்த்தப்படுவோம். (லூக் 14:11)
 
இன்று தாழ்மையான சுபாவம் அநேகரிடத்தில் இல்லாததற்குக் காரணம், தான் என்கிற சுயம் அழியாததால்தான். சுயம் சுட்டெரிக்கப்படும்போது தான் கர்த்தர் நமக்குள் வாழ முடியும். 
 
நமக்குள் கர்த்தர் பிறக்க வேண்டுமானால் நமக்குள் தாழ்மை இருக்க வேண்டும். மரியாள் தாழ்மையாக இருந்ததால் இயேசு அவளில் பிறக்க முடிந்தது. மரண பரியந்தம் தம்மைத் தாழ்த்தினாரே. அந்த குணம் இல்லையென்றால் அவரை வணங்குவது விருதா. அவரை மாதிரியாக வைத்துப் போனாரே, அவரை மாதிரியாகப் பின்பற்றுகிறோமா! பதவி வெறி, சுயநலம், பெருமை, கர்வம், சர்வாதிகாரம் போன்றவைகள் தாழ்மை இல்லாத இடத்தை நிரப்பி வரும் துர்குணங்கள். எனவேதான் குடும்பங்களில் பிளவு, திருச்சபையில் பிளவு, ஏன் ஊழியங்களில் கூட பிளவு, இதனால் ஆண்டவரின் நாமம் புறஜாதிகள் முன் நம்மால் தூஷிக்கப்படுகிறது. (ரோமர் 2:24)
 
ஒரு கழுதைக் கூட கர்த்தரை உயர்த்திக் காட்டியது. நான் அல்ல எனக்கு மேல் ஒருவர் இருக்கிறார். அவரைப் பாருங்கள் என்றது. தாழ்மை இல்லாததால் கர்த்தரைக் கனவீனம் பண்ணுகிறோம். அவரை துக்கப்படுத்துகிறோம். அவரை போஜனப்பிரியன் என்றவர்களையும், பிசாசு பிடித்தவன் என்றவர்களையும் அவர் சபிக்கவில்லை, சண்டை போடவுமில்லை. அவர்களைவ விட்டு விலகவுமில்லை. நாம்  அப்படியிருக்கிறோமா! யாராவது நம்மைத் துன்புறுத்தும்போது, பரியாசம் பண்ணும்போது நம் ஆண்டவரை துன்பப்படுத்தின போதும், பரியாசம் செய்த போதும் பொறுமையாகச் சகித்தாரே, அவர் சகித்ததைப் போல் நாமும் சகிப்போம் என்கிறோமா!
 
கிறிஸ்துவை பிரதிபலிக்காதவள் கிறிஸ்தவள் அல்ல, தாழ்மை இல்லாதவள் கிறிஸ்துவின் பிள்ளை அல்ல. மற்றவர்களை நாம் ஆள நினைக்கக் கூடாது, கர்த்தர் மாத்திரமே நம்மை ஆள வேண்டும். தாழ்மை இல்லாததால் அநேக இடங்களில் பிரிவினைகள். இதனால் பிசாசுக்கு கொண்டாட்டமாகிறது. அவன் ஆக்கிரமித்துக் கொள்கிறான். கிறிஸ்து எந்தப் பதவியையும் வகிக்கவி;ல்லை. இன்று சபைகளிலும் பதவி ஆசை தலைவிரித்தாடுகிறது. முதலாவதாக இருக்க விரும்பினால் எல்லாருக்கும் கடைசியாக இருக்க வேண்டும். (மாற்கு 9:35) பதவியும், பட்டமும் நம்மைப் பரமனிடம் சேர்க்காது. பெயர் பிரஸ்தாபத்திற்காக எதையும் செய்யாதபடி உண்மையும் உத்தமமாய் நம் கடமையை மாத்திரம் செய்யவேண்டும். சிலுவையின் மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தினார் ஆண்டவர். அவரின் அடிச்சுவடிகளைப் பின்பற்ற வேண்டிய நாம், எந்த விதத்தில் அவரை விட மேலானவர்கள் என்று தாழ்மையில்லாதிருக்கிறோம்? தாழ்மையாக இருந்தால் பிதா இயேசு கிறிஸ்துவை உயர்த்தினதைப் போல் நாமும் தாழ்மையாக இருக்கும்போது உயர்த்தப்படுவோம் (நீதி 15:33) அதைவிட்டு நம்மை மேன்மை பாராட்டிக் கொண்டால் அழிவுதான் மிஞ்சும்.
 
“கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்போழுது அவர் உங்களை உயர்த்துவார்.” (யாக்கோபு 4:10)

சகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.