நீங்கள் தின தியானப் புத்தகத்தையோ அல்லது கிறிஸ்துவ பத்திரிக்கையில் வரும் அனுதின வேத தியானக் குறிப்புகளையோ பயன்படுத்துவீர்களானால் கொடுக்கப் பட்டிருக்கும் வேதப் பகுதியை முதலாவது வாசித்துவிட்டு, கேள்விக்கான பதில்களை யோசித்துப் பாருங்கள். இதற்குப் பின், குறிப்புகளை வாசிப்பது அதிக பயனைக் கொடுக்கும்.
கீழ்க்கண்ட கேள்விகளில் ஒன்றிற்கோ, ஒன்றிற்கு மேற்பட்ட கேள்விகளுக்கோ பதில் கண்டுபிடிக்கும்வரை அந்தப்பகுதியை மீண்டும் மீண்டும் ஜெபத்துடன் வாசியுங்கள். பின் ஒருமுறை வாய்விட்டு கருத்துடன் சத்தமாக வாசியுங்கள். மெதுவாகவும், கவனமாகவும், எதிர்பார்ப்புடனும் வாசித்துக் கொண்டேயிருங்கள். காலைநேர வேத வசன தியனத்துக்காக ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்களாவது செலவிடுங்கள்.
1. வாசிக்கும் பகுதியின் முக்கியமான கருத்து அல்லது பிரதான செய்தி என்ன? வாசிக்கும் பகுதியில் யாரைப் பற்றி அல்லது எதைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது?
2. அந்தப் பகுதிக்கு ஆதாரமாயிருக்கும் வசனம் என்ன?
3. நீங்கள் வாசிக்கும் பகுதியில் குறிப்பாக உங்கள் மனதில் படும் வார்த்தையோ சிந்தனையைத் தூண்டும் வாக்கியமோ, வசனமோ உண்டோ என்று பாருங்கள்.
4. ஆண்டவர் கொடுக்கும் வாக்குத்தத்தம் என்ன?
5. கர்த்தர் இடும் கட்டளை என்ன?
6. எதைக் குறித்து ஆண்டவர் உங்களை எச்சரிக்கிறார்?
7. ஜெபத்தைப் பற்றி இந்தப் பகுதியில் என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது?
8. வாசிக்கும் பகுதியிலிருந்து ஆண்டவரைப் பற்றி என்ன கற்றுக் கொள்ளுகிறீர்கள்?
9. வேதாகம பக்தர்களின் முன்மாதிரி ஏதாவது கொடுக்கப்பட்டிருக்கிறதா?
10. நீங்கள் விடவேண்டிய பாவத்தைக் குறித்து வேத வசனங்கள் உண்டோ என்று கவனமாக படித்துப் பாருங்கள்.
11. வாசிக்கும் பகுதியில் உள்ள வசனத்திற்கு ஒத்த வேறு வசனங்களைத் தொடர்புபடுத்திப் பாருங்கள்.
12. உங்களுடைய வாழ்க்கையில் உள்ள ஏதாவது ஒரு தேவைக்கோ, சூழ்நிலைக்கோ ஏற்ற (பொருத்தமான) வசனம் உண்டோ என்று தேடிப்பாருங்கள்.
13. வாசிக்கும் பகுதியிலுள்ள வார்த்தைகளை எப்படி உங்கள் ஜெபமாக மாற்ற முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.
14. நீங்கள் வாசிக்கும் பகுதியில் விளங்குவதற்கு கடினமாக வசனங்களைக் குறித்துக் கொண்டு வேதவசனங்களைக் கற்றறிந்தவர்களிடம் விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள். ஜெபத்தோடு வேதாகமத்தில் இருந்து கண்டு கொள்ளும் பதில்களை ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.