ஒரு முறை பணக்கார வாலிபன் ஒருவன் பொழுதைப்போக்க மீன் பிடிக்க ஆசைப்பட்டான்.அதற்காக விலை உயர்ந்த தூண்டில் கம்பி,மிதவைக்கட்டை, அறுபடாத கயிறு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு மீன்களைக் கவர்ந்திழுக்க நல்ல உணவையும் எடுத்துக்கொண்டு குளத்துக்குச் சென்றான். கரையில் நின்று கொண்டு மிகுந்த நம்பிக்கையுடன் தூண்டிலை தண்ணீருக்குள் வீசினான். ஆனால் வெகுநேரமாகியும் அவனால் ஒரு மீனைக்கூடப் பிடிக்க முடியவில்லை.
தூரத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன் இதைப்பார்த்தான். கீழேகிடந்த குச்சி ஒன்றை எடுத்தான். தன் பையில் இருந்த தூண்டிலையும் ஈர மண்ணில்கிடந்த மண்புழுவையும் எடுத்துக்கொண்டு குளக்கரையில் குப்புறப்படுத்து தண்ணீருக்குள் தூண்டிலைப் போட்டான்.சிறிது நேரத்துக்குள் மீன்கள் ஒவ்வொன்றாகப் பிடிபட்டன. வாலிபனுக்கு மிகுந்த ஆச்சரியம்.சிறுவனிடம் காரணம் கேட்டான்.
அதற்கு சிறுவன், "உங்கள் நிழலே உங்கள் தோல்விக்குக் காரணம்.நீங்கள் நின்று கொண்டு தூண்டிலை வீசும்போது நிழல் தண்ணீரில் படுவதால் மீன்கள் அருகே வருவதில்லை.கீழே படுத்துக்கொண்டு தூண்டிலை வீசுங்கள்.மீன்கள் அகப்படும் என்றான்.வாலிபனும் தன் ஆடைகள் அழுக்கானாலும் பரவாயில்லை என்று நினைத்து கீழே குப்புறப்படுத்துக்கொண்டு தூண்டிலை வீசினான். மீன்கள் அகப்பட்டன.
தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. நீதி.11.2