ஒரு குடும்பம் வேதத்தின் அடிப்படையில் எப்படி இருக்க வேண்டும் என்றும் சமுதாயத்தில் எப்படி உண்மையான சாட்சியான குடும்பமாக வாழ முடியும் எப்படி ஒரு குடும்பம் கடவுளை மகிமைப்படுத்தலாம் இதன் மூலம் எப்படி ஒரு நல்லதொரு சந்ததியை உருவாக்கலாம் என்று பார்ப்போம்.
கிறிஸ்தவ குடும்பம் எல்லா உறவிலும் சரியான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மற்ற உறவுகளுடன் உறவு வைத்து கொள்வதற்கு முன்பு கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
கணவனின் கடமை
1. கணவன் தன் மனைவியை தன சொந்த சரீரமாக நேசிக்க வேண்டும். உலகத்தில் கடவுளுக்கு பின் ஒரு கணவன் தனக்கு தன் மனைவியைத்தவிர முதல் அன்பை வேறு எந்த உறவுக்கும் கொடுக்கக்கூடாது. மனைவியை முழுமையாக உண்மையாக நேசிக்க வேண்டும். இதற்கு வேதம் இயேசுவின் அன்பை ஒப்பிட்டுக் கூறுகிறது. (எபே.5.25) இயேசு திருச்சபைக்காக எப்படி தன்னையே தியாகமாக கொடுத்தாரோ அப்படிப்பட்ட அன்பு ஒரு கணவன் தன் மனைவியிடம் செலுத்த வேண்டும்.
2. கணவன் தன் பெற்றோரை விட்டு தன் மனைவியுடன் இசைந்திருக்க வேண்டும். தாய்க்குப்பின் தாரம் என்பதை நினைவில் வைத்து திருமணத்திற்கு பின் தாரத்திற்கு முதலிடம் தந்து தனது தாயையும் அரவணைக்க வேண்டும். தாயும் தாரமும் ஒனறாக இருக்க வேண்டிய பொறுப்பு கணவனைச் சார்ந்தது. இரு உறவுகளையும் நடுநிலைமையில் இருந்து திருப்திப்படுத்துவது கடினம். மனைவியைச் சார்ந்து பெற்றோரை திருப்திபடுத்தலாம். ஆனால் பெற்றோருடன் சேர்ந்து மனைவியை மகிழ்விப்பது இன்று கடினமான காரியம். மனைவியுடன் இசைந்திருப்பான் என்பதற்கு மனைவி சொல்லே மந்திரம் என்பது அல்ல. பெற்றோரை உறவினரை விட்டு வரும் தன் மனைவிக்கு எல்லா உறவுகளையும் நிரப்பும் பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.
3. கணவன் தன் மனைவியுடன் எப்போதும் இணைந்திருக்க வேண்டும். இந்த இசைவு சிந்தையிலும் சரீரத்திலும் பொருள் வருகிறது. கணவன் தன் மனைவியை விட்டு உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் மட்டுமே பிரிந்திருக்கலாம் என்று வேதம் கூறுகிறது. மற்ற நேரங்களில் வேலை விஷயமாக சரீரப்பிரிவு மட்டுமே அங்கு இருக்க வேண்டும். இந்த இசைவில் சின்ன தடுமாற்றம் ஏற்பட்டாலும் பிரச்சனையாக வெடிக்கிறது. இதில் கணவன் மனைவி இருவருக்கும் முக்கிய சமமான பங்கு இருக்கிறது. ஆகவே கணவன் மனைவி இருவரும் எப்போதும் இசைந்திருக்க வேண்டும். சரீரப் பிரிவைவிட சிந்தையில் பிரிவினையை வேதம் அதிகம் கண்டிக்கிறது. (எபே.5.5-33).
4 .கணவன் தன் மனைவியை போஷித்து காக்க வேண்டும் (எபே.5.29). கடவுள் தம் மக்களை காப்பதில் எப்படி பொறுப்புள்ளவராக கடமையுள்ளவராக இருக்கிறாறோ அப்படியே கணவனும் தன் மனைவியை போஷித்து காப்பாற்ற கடமையுள்ளவனாக இருக்கிறான். அதற்காக இயேசுவைப்போல் எந்தவித தியாகமும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். கிறிஸ்து சபைக்கு தலையாய் இருந்து இயக்குவது போல் கணவனும் மனைவிக்கு நல்ல தலைவனாக இருந்து முழு சரீரத்திற்கும் பயனள்ள காரிங்களை செய்;ய ஏற்றவனாக இருக்க வேண்டும்.
5. கணவன் தன் மனைவியின் முழு ஜீவயத்திற்கும் பொறுப்புள்ளவனாக இருக்கிறான் (எபே 5.25-27). இயேசு சபையாகிய மணவாட்டியை தனக்கு முன்பாக கறையற்ற பிழையற்ற மகிமையாக நிறுத்தி அழகு பார்க்கவும் அனுபவிக்கவும் தன்னையே அதற்காக பணித்தார். ஒரு ஆணின் வெற்றித் தோழ்விக்கு பின் ஒரு பெண் இருப்பது போல் ஒரு மனைவியின் வெற்றி தோழ்விக்கு கணவன் பொறுப்பாயிருக்கிறான். கணவனின் பொறுப்பற்ற தன்மையே மனைவியின் ஜீவியத்திற்கு கறையும் பிழையும் ஏற்பட காரணமாகிறது. மனைவியின் ஆன்மிக மற்றும் சரீர வாழ்விற்கு தேவையான அனைத்தையும் கணவன் கொடுக்க ஒப்புக் கொடுக்கப்பட்டவனாக இருக்க வேண்டும்.