பரிசுத்த வேதாகமத்தை ஓர் ஆன்மீகக் கண்ணாடி என்று அழைக்கலாம். தேவன் எப்படிப்பட்டவர்? என்பதை வேதம் நமக்கு காட்டுகிறது. மனிதன் எப்படிப்பட்டவன், எப்படிப் பட்டவனாக மாற வேண்டும்? என்பதையும் வேதம் போதிக்கிறது. ஒவ்வொரு நாளும் நிலைக் கண்ணாடி முன் நின்று நம்மை நாம் பார்த்து சரிசெய்து கொள்வது போல வேதாகமத்தை ஒவ்வொரு நாளும் வாசிக்கும் போது நம்முடைய உள்ளத்தை ஆராய்ந்து நம்முடைய வாழ்க்கையை நிதானித்து நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.
தண்ணீரைப் போல, தேவனுடைய வசனம் கத்திகரிக்கும் தன்மை கொண்டதாயிருக்கிறது.அக்கினியைப் போலான கர்த்தருடைய வார்த்தை பாவ அழுக்கைப் போக்கி உள்ளத்தையும் மனதையும் சுத்திகரிக்க வல்லதாயிருக்கிறது.
அந்தகாரம் நிறைந்த இந்த உலகில் நாம் செய்யும் அன்றாடகத் தீர்மானங்கள் ஆண்டவருடைய விருப்பத்திற்கிசைய அமைவதற்காக நம்முடைய வாழ்க்கைக்குத் திசை காட்டும் தேவனுடைய வசனம் கால்களுக்குத் தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
பரிசுத்த வேதாகமம் ஆன்மீக வியாதியாகிய பாவத்தினால் பாதிக்கப்பட்டவர்களைக் குணமாக்குகிறது. வேதத்தின் வசனங்கள் மனிதரின் சரீர, மன நோய்களை நீக்கி அவர்களுக்கு ஆரோக்கியம் அருளும் ஆற்றல் கொண்டவைகளாக இருக்கின்றன. அன்றாடக வாழ்க்கையின் உள்ளம் புண்படக்கூடிய சூழ்நிலைகளில் பரிசுத்த வேதாகமத்தின் வசனங்கள் ஆறுதல் தருபவைகளாகவும் காயத்தை ஆற்றுகின்றவைகளாகவும் இருக்கின்றன.