நாம் காலையில் எழுந்து நம்முடைய காலைக் கடமைகளை முடிக்கிறோம். உண்கிறோம். உடுக்கிறோம். அலுவலகம் செல்கிறோம். பள்ளிக்கூடம் செல்கிறோம். ஆனால் இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் நாம் தேவனை மறந்து விடக்கூடாது. வேதம் "அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்." என்று சொல்லுகிறது. அனுதினமும் அரைமணி நேரமாவது இயேசுவின் பாதத்தில் நீங்கள் செலவிட வேண்டும். வேதத்தை வாசித்து ஜெபிக்க வேண்டும்.
மெதுவாகவும், கவனமாகவும், எதிர்பார்ப்புடனும் வேதத்தை வாசிக்க வேண்டும் .
வாசிக்கும் பகுதியின் முக்கியமான கருத்து அல்லது பிரதான செய்தி என்ன? வாசிக்கும் பகுதியில் யாரைப் பற்றி அல்லது எதைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது?
நீங்கள் வாசிக்கும் பகுதியில் விளங்குவதற்கு கடினமாக வசனங்களைக் குறித்துக் கொண்டு வேதவசனங்களைக் கற்றறிந்தவர்களிடம் விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள். ஜெபத்தோடு வேதாகமத்தில் இருந்து கண்டு கொள்ளும் பதில்களை ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் உங்கள் மனதில் பதிந்த அளவிற்கு தெளிவாகத் தென்படுகிற வசனத்தை அல்லது கருத்தை அந்த நாளுக்குத் தேவன் உங்களோடு பேசிய செய்தியாக எடுத்துக் கொள்ளுங்கள். கற்றறிந்த சத்தியங்களைக் கருத்தாகத் தொகுத்து மறக்க முடியாத அளவிற்கு மனதில் பதித்துக் கொள்ளுங்கள். வேதப் பகுதியின் மூலம் உங்களுடன் ஆண்;;டவர் பேசி, போதித்தவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள்.
நாள்முழுவதும் அதையே யோசித்துக் கொண்டிருங்கள். ஒவ்வொரு நாள் மதியத்திலும், இரவிலும் அன்று காலையில் கற்றுக்கொண்ட வசனத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்த வேத வசனத்தை ஒவ்வொருநாளும் எழுதி வைத்துக் கொள்வது நல்லது.
கற்றுக்கொண்ட உண்மைகளை அனுபவத்தில் கொண்டுவருவதும், வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் தான் மிகவும் முக்கியம். அதற்காக கர்த்தர் உங்களுக்குக் கிருபை தரவும் உங்களைப் பெலப்படுத்தவும் ஜெபியுங்கள்.
காலை நேர வேதவசன தியானத்தில் நீங்கள் கற்றுக்கொண்டவைகளை மற்ற விசுவாசிகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதற்கு முந்திய ஆறு நாட்களில் கற்றுக் கொண்டவைகளை ஒருமுறை திருப்பிப் பாருங்கள்.