நாம் அனுதினமும் பயன்படுத்துகிற கண்ணாடி நாம் எப்படி இருக்கின்றோம் என்பதை அப்படியே காண்பிக்கிறது (பிரதிபலிக்கிறது). அதைப் போல கர்த்தருடைய வசனம் நம்முடைய ஆத்மீக நிலையை எடுத்துக் காண்பிக்கும் ஆவிக்குரிய கண்ணாடியாக இருக்கிறது. பரிசுத்த வேதாகமத்தை நாம் ஆராயும்போது நாம் அதைக்குறித்து சில சத்தியங்களை அறிந்து கொள்ளுகிறோம் என்பதை அறிந்து கொள்வதே முக்கியமானதாகும்.
பரிசுத்த வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்கச் சிறுவன் ஒருவனைப் பார்த்து மிஷனெரி, ‘தம்பி வேதாகமத்தில் என்ன வாசிக்கிறாய்?’ என்று கேட்டார். சிறுவன் ‘ஐயா, நான் வேதாகமத்தை வாசிக்கவில்லை வேதாகமம் என்னை வாசிக்கிறது’ என்று பதில் சொன்னான். வேதாகமத்தின் வெளிச்சத்தில் அவன் தன்னுடைய வாழ்ககையை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான் என்பதே அவன் கூறியதின் பொருள்.
நமது உள்ளத்தையும், வாழ்க்கையையும் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆவியானவரின் துணையோடு ஆராய்ந்து பார்ப்பது ‘தற்பரிசோதனை’ என்றழைக்கப்படுகிறது.
வேத வசனத்தின் உபதேசம் அன்றாட வாழ்க்கைக்கு எப்படி பொருத்தமாயிருக்கிறது? என்பதற்கு கீழ்க்கண்ட வசனம் உதாரணமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். (யாக்கோபு 1:2,3)
மனிதன் தனக்கு வரும் துன்பம், துக்கம், துயரம் தீராதோ எனப் பொதுவாகக் கேள்வி கேட்கிறான். அங்கலாய்க்கிறான். தன்னைத் தான் நொந்து கொள்ளுகிறான். ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் அவைகளை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும். ஆகவே தான் இப்படிப்பட்ட சோதனைகளைக் குறித்து மகிழ்ச்சி அடைய வேண்டுமென்று யாக்கோபு எழுதியிருக்கிறார். மேலே கொடுக்கப்பட்ட வசனத்தைக் கொண்டு உங்கள் வாழ்க்கையை ஆராய்வதற்கான கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கேள்விகள்
1. போன முறை ஏதோ இக்கட்டான சூழ்நிலையில் நான் இருந்தபோது நான் என்ன யோசித்தேன்? முறு முறுத்தேனா? மனம் மடிவடைந்தேனா?
2. நமக்கு வரும் கஷ்டங்களில் ஆண்டவரைத் துதிக்க முடியுமா?
3. ஆண்டவர் தான் அந்த சூழ்நிலையை அனுமதித்தான் என்று நம்பி பொறுமையோடு இருக்க முடியுமா?
4. துன்பத்தை அனுபவிக்கிற மற்ற மக்களைக் குறித்து நான் சிந்தையுள்ளவனாயிருக்கிறேனா?
5. நமக்கு வரும் பரீட்சையான, நெருக்கமான சூழ்நிலைகளுக்காக நாம் ஏன் தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்?
6. சம்பந்தப்படுத்திப் பார்க்கக் கூடிய வேத வசனங்கள்:
சங்கீதம் 119:71 – நான் உபத்திரவப்பட்டது நல்லது. ரோமர் 5:3,4 – உபத்திரவம் பொறுமையையும்… உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம்.
1 பேதுரு 5:9 - … அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறி வருகிறதென்று அறிந்திருக்கிறீர்கள்.