புதிதாகப் பிறந்த குழந்தை ஆவலோடு பாலை உட்கொள்கிறது. அதைப்போல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு புதிதாகப் பிறந்த விசுவாசியும் வேத வசனமாகிய ஞானப்பாலின் மேல் வாஞ்சையும். நாட்டமும் கொண்டிருக்க வேண்டும்.
உட்கொள்ளும் ஆகாரத்தை நாம் அவசர அவசரமாக விழுங்கி விடுவதில்லை. அதை நன்றாக சமைத்து, ருசித்து, சுவைத்து, நேரம் எடுத்து மென்று உட்கொள்ளுகிறோம். ஒவ்வொருநாளும் வேளாவேளைக்குத் தவறாமல் சாப்பிடுகிறோம். நம்முடைய சீரண மண்டலம் நாம் உட்கொண்ட ஆகாரத்தை சீரணித்து. உட்கிரகித்துக் கொள்கிறது. அதைப்போல நாம் பரிசுத்த வேதாகமத்தை மேற்போக்காக வாசிப்பதற்கும் மேலாக, வேதவசனங்களை மீண்டும் மீண்டும் வாசித்து, யோசித்து, தியானிக்க வேண்டும். மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். இப்படி ஆவிக்குரிய சத்தியங்களை ஆத்துமத்தில் உட்கிரகிக்கும்போது தான் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை ஊட்டமும், உற்சாகமும், உறுதியும் பெற்று வளர்ச்சியுறுகிறது.
அனுதினமும் அரைமணி நேரமாவது நீங்கள் பரிசுத்த வேதாகமத்துடன் செலவிட வேண்டும். பரிசுத்த வேதாகமத்தில் வாக்குத்தம், கட்டளை, எச்சரிக்கை, ஜெபம், முன்மாதிரி ஆகிய காரியங்களைப் பார்க்கிறோம். அனுதினமும் அதிகாலையில் ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்பதற்காகப் பரிசுத்த வேதாகமத்தை வாசிக்க வேண்டும்.
நீங்கள் தினமும் வேதத்தை வாசிக்கும்போது...
1. இன்றைக்கு ஆண்டவர் எனக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தம் என்ன?
2. இன்று நான் பெறும் கட்டளை என்ன?
3. எதைக்குறித்து ஆண்டவர் என்னை எச்சரிக்கிறார்?
4.. ஜெபம் பண்ணுவதைக் குறித்து வேதாகமம் என்ன போதிக்கிறது?
5. வேதாகம பக்தர்களின் முன்மாதிரியிலிருந்து நான் கற்றுக் கொள்வது என்ன?
என்றெல்லாம் ஆராய வேண்டும். வேதாகம வசனத்தோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.