Thursday March 28 2024

சிட்சையின் பலன்
இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்
எபிரேயர் 12:10-11

ஒரு பிடிவாதமான முரட்டு குணமுள்ள சிறுபிள்ளையிருந்தாள். சிறுவயதிலே தான் நினைத்த வழியில் சென்றாள். ஓரு நாள் ஒரு பெரிய விபத்தில் அகப்பட்டு ஆயுள் முழுவதும் நொண்டியாய் இருக்க வேண்டிய நிலை உருவானது. அது இன்னும் அவளை முரட்டு குணமுள்ளவளாக்கியது.

ஓரு நாள் அவளை சந்திக்க ஒரு ஊழியர் வந்தார். அவள் புரிந்து கொள்ளும் வண்ணமாக ஒரு கதையை சொன்னார். "ஆதியில் பூமி சமமான புல்வெளியாக இருந்தது. அதில் நடந்த எஜமான், புல்வெளியிடம் 'உன்னில் ஏன் பூக்களில்லை' என வினவினார். புல்வெளி பதிலாக, 'என்னிடம் விதைகளில்லை' என்றது. பின்பு அவர் பறவைகளிடம் பேசினார். அவைகள் சகலவித பூவிதைகளையும் தூவியது. விரைவில் கல்வாழை, காட்டு செவ்வந்தி போன்ற ஒரு சில மலர்கள் பூத்தன. எஜமான் புல் வெளியிடம் 'அதிக மணம் தரும் செடிகள் எங்கே?' என்றார். புல்வெளி துயரக்குரலில் 'எஜமான், என்னால் அப்பூச்செடிகளை காப்பற்ற முடியவில்லை. அவைகள் மேலோட்டமாக முளைப்பதினால் கடுங்காற்று வீசன உடனே அவைகள் பறந்து போகின்றன' என்றது.

எஜமான் பூமிக்கு கட்டளையிட்டார். பூமி அதிர்ந்தது. புல்வெளியின் இதயத்தை பிளந்தது. புல்வெளி வேதனையால் முனகியது. காயத்தால் வருந்தியது. பின் அந்த பிளவினூடே நதி பாய்ந்தது. பறவைகள் மீண்டும் விதைகளை தூவின. மீண்டும் பூச்செடிகள் முளைத்தன. அப்போது கடும் காற்றடித்தாலும் அசைக்க முடியாத அளவிற்கு அவற்றின் வேர்களை ஆழமாய் விட முடிந்தது. சில நாட்களில் ஆயிரக்கணக்கான பூக்கள் பூத்து குலுங்கின. எஜமான் இன்புற்று அங்கு இளைப்பாறினார்" என்று கதையை கூறி பின் அவ்ஊழியர் ஒரு வசனத்தை வாசித்தார். 'ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை' - (கலாத்தியர் 5:22-23) அதில் ஆவியின் கனி என வரும் இடத்தில் பூ என வாசித்து, பின்பு சாந்தம், நீடிய பொறுமை போன்ற பூக்கள் பிளவில்தான் செழித்து வளர முடியும்" என்றார். அச்சிறுமியும், தன்னுடைய துன்பத்திலும் அப்படிப்பட்ட பூக்கள் பூக்க தேவனிடம் தன்னை அர்ப்பணித்தாள்.

கடினமான நிலத்தில் புல்பூண்டுகள் கூட முளைப்பதில்லை. அதுபோல கடின இருதயத்திலிருந்து எந்த நற்சுபாவங்களும் வெளிப்பட முடிவதில்லை. ஆகவே தாவீதும் நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்தை வாஞ்சிக்கிறார். ஆம் இதயம் நொறுக்கப்படும் அனுபவமே தேவனிடம் இன்னும் நம்மை கிட்டி சேர்க்கிறது. இதயம் எப்போது பிளக்கப்படுகிறது? துன்பங்களும் பாடுகளுமே நம் இதயத்தை நொறுக்குகின்றன. 1 பேதுரு 1:6 ல் '..என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்' என்று எழுதப்பட்டிருக்கிறது. நம் வாழ்க்கையில் நமக்கு எதிராக நிகழுகின்ற சில நிகழ்வுகள் மூலமாக நம்மை சீர் செய்யவும், நம் குணநலன்களை மாற்றி அமைப்பதும் தேவ ஞானத்தின் ஒரு பகுதியாகும்.

பிரியமானவர்களே, உண்மை, பொறுமை, தாழ்மை, சாந்தம், இன்பு போன்ற ஆவிக்குரிய பண்புகள் அனைத்தும் நாம் துன்பங்களையும் பாடுகளையும் சந்தித்ததன் விளைவாகவே நம்மில் ஏற்படுகின்றன. ஆகவே துன்ப பெருக்கிலே சோர்ந்து போகாதீர்கள். தேவனது நொறுக்குதலின் திட்டத்திற்கு உங்களை ஒப்பு கொடுத்து விடுங்கள். அப்போது உங்கள் ஜீவியத்திலிருந்து தேவ சாயலும், ஆவியின் கனிகளும் வெளிப்படும். 
 
சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலனடைய
ஆற்றி தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார்
தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் நானும் தேவனோடிருப்பேன்

ஜெபம்
அன்பும் இரக்கமும் நிறைந்த எங்கள் நல்ல தகப்பனே, இந்த வேளைக்காக நாங்கள் உம்மை துதிக்கிறோம். ஆவியின் கனிகள் எங்களில் வெளிப்படும்படியாக நாங்கள் கொஞ்சகாலம் துன்பங்களை சகிக்கும்படியாக எங்கள் வாழ்க்கையில் அனுமதித்திருக்கிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தேவ சாயல் எங்களில் காணப்படும்படி உம்முடைய திட்டத்திற்கு எங்களை அர்ப்பணிக்கிறோம். நாங்கள் சோர்ந்து போகாதபடி எங்களை திடப்படுத்தும். ஆவியின் கனிகளை வெளிப்படுத்த கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.



இன்றைய நாளுக்கான இப்பகுதி அனுதின மன்னா குழுவினரால் எழுதப்பட்டது. இவர்களை தொடர்புகொள்ள anudhinamanna@gmail.com என்ற முகவரியில் அனுகலாம்.